சம வேலைக்கு சம ஊதியம்" தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தென்காசி மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்!
"சம வேலைக்கு சம ஊதியம்" தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்! தென்காசி மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம் அரசு அலுவலர் ஒன்றிய கட்டிட அரங்கில் நடந்தது.
இக்கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார்.வன மாநில செயற்குழு உறுப்பினர் மருது பாண்டியன் முன்னிலை வகித்தார்.மாவட்ட செயலாளர் செய்யது இப்ராகிம் மூஷா அனைவரையும் வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்தில்
1) தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு என ரூபாய் 36 ஆயிரத்து 855 கோடி ஒதுக்கப்பட்டதற்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆறாவது வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்து கல்லூரிக் கல்வி மற்றும் பிற உயர்கல்வி படித்திடும் மாணவிகளின் வங்கிக்கணக்கில் மாதம் ரூபாய் ஆயிரம் செலுத்தப்படும் என்ற அறிவிப்புக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரத்தில் பன்னெடுங்காலமாக தமிழ்வழிக் கல்வியை சமூக சேவையோடு அரசு பள்ளிக்கு ஈடாக செய்துவரும் கிராமப்புறப் பள்ளிகளில் உள்ள அதே ஏழை குழந்தைகளுக்கு கல்வி போதித்து வரும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு இல்லை என்ற அறிவிப்பு தற்போது இப்பள்ளிகளில் பணிபுரியும் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் பெரும் வருத்தத்தையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகவே தமிழ்வழிக் கல்வியில் பயிலும் இம்மாணவிகளுக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அதே போன்று மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ மாணவிகளை யும் சேர்த்திட மாண்புமிகு தமிழக முதல்வர் கருணை கூர்ந்து ஆணையிட வேண்டும் என்றும் இச்செயற்குழு வேண்டிக் கொள்கிறது.
2) அரசாணை எண் 101,108 ஐ ரத்து செய்து தொடக்கக்கல்வித்துறை முன்பு போல் செயல்படவும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தலைமையில் வட்டார கல்வி அலுவலர்கள் செயல்படவும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு முன்பு போல் தேர்வுநிலை சிறப்புநிலை அதிகாரங்களை மற்றும் பிறஅதிகாரங்களை வழங்கிடவும் இதன்மூலம் நிர்வாக பணிச்சுமை, கோப்புகள் தேக்கம் நீங்கிட உரியஆணை பிறப்பித்திட கல்வி அமைச்சரை வேண்டிக் கொள்வது.
3) ஆசிரியர்கள் தங்கள் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ளும் பொருட்டு மாணவர்களின் கல்வி நலன் கருதி பன்னெடுங்காலமாக அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்கப்பட்டு வந்தது கடந்த ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது இவ்ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கிட ஆணை பிறப்பித்திட வேண்டும். மேலும் 10.03.2020 முன்பு வரைஉயர்கல்வி கற்ற ஆசிரியருக்கான நிலுவைத் தொகை கேட்புப்பட்டியல் படி உடனடியாக ஊதியம் வழங்கிட அனுமதித்திட தமிழக அரசை வேண்டிக்கொள்வது
4) அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் மாணவர்களின் உடல் நலன் கருதி ஒரு உடற்கல்வி ஆசிரியரை உடனடியாக நியமனம் செய்திட வேண்டும்.
5) ஆசிரியர்களின் கற்பித்தல் பணியை பாதிக்கும் வகையில் தொடர்ந்து எமிஸ் இணையதளத்தில் தினமும் உள்ளீடு செய்யும் பணிகள் மிகுந்த மனஉளைச்சலை ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தியள்ளன. ஆகவே இப்பணிக்கென ஓர் ஊழியரை அனைத்து பள்ளிகளுக்கும் உடனடியாக நியமனம் செய்திட பள்ளிக்கல்வித் துறையை வேண்டிக் கொள்வது.
6) ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஊதிய மற்றும் பிற பணபலன்கள் பெறுவதில் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ் உள்ளீடு செய்யும் தொடர் குளறுபடி மற்றும் செயல்படாமையை போர்க்கால அடிப்படையில் சரிசெய்து உடனடி நடவடிக்கை எடுத்திட நிதி மற்றும் கருவூலத்துறையை வேண்டிக்கொள்வது.
7) தற்போதைய மார்ச் மாதத்திலேயே அக்னிவெயில் போல தமிழகம் முழுவதும் கொடும் வெயில் காலை 7மணி முதல் மாலை 5மணி வரை தொடர்வதாலும் பல பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கு காய்ச்சல், வயிற்றுவலியால் அவதிப்படுவதாலும் மாணவர்கள் பள்ளிவருகையில் சுணக்கம் ஏற்படுகிறது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்ககூடும். தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் இம் மூன்றாம் பருவத்திற்காக அரசு வெளியிட்டுள்ள குறைக்கபட்ட பாடப்பகுதிகளின்படி ஏப்ரல் இரண்டாம் மூன்றாம் வாரத்திற்குள் பாடப்பகுதிகள் அனைத்தும் முடியக்கூடும் என்பதால் 1 முதல் 8 வகுப்புகளுக்கான தேர்வுகளை ஏப்ரல் இறுதிவாரத்தில் நடத்திடவும் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்திலே இருந்தே மேமாதம் கோடைகால விடுமுறையாக தொடக்க நிலை மாணவர்களின் உடல் மனம் கருதியே இந்நடைமுறை தொடர்ந்ததை நம் விடியல் அரசு மாற்றாமல் அடுத்த கல்விஆண்டு வழக்கம்போல் இதமான சூழல் கொண்ட சூன்1ம்தேதி பள்ளி திறந்திடவும், உரிய ஆணை வெளியிட இப்பச்சிளம் குழந்தைகளின் உடல்நலன் மற்றும் கல்வி நலனில் என்றும் அக்கறை கொண்டு இச்செயற்குழுவேண்டுகிறது. அதேதாயுள்ளம். கொண்ட தமிழகமுதல்வரும் கல்விஅமைச்சரும் உடனடி ஆணையிட வேண்டிக் கொள்வது.
8) ஒருங்கிணைந்த திருநெல்வேலி தென்காசி மாவட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட பிரிப்பினால் தற்போதைய தங்கள் சொந்த மாவட்டத்திற்கும் தாய் ஒன்றியத்திற்கும் செல்ல முடியாத நிலை தற்போது வரை தொடர்கிறது.
எனவே இந்த ஒரே ஒரு முறை மட்டும் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் பணியிடங்களை வெளியீடு செய்து ஒருமுறை அவர்களுக்கு சொந்தமாவட்டங்களுக்கு செல்லதக்கதாய் ஒன்றியத்தில் மீண்டும் பணிபுரிய வாய்ப்பு வழங்கிய பின்பு மாவட்ட மாறுதல் கலந்தாய்வை நடத்திட தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் மற்றும் பள்ளி கல்வி ஆணையாளரை வேண்டிக்கொள்வது.
9) அரசு ஊழியர் ஆசிரியர்களின் வாழ்வாதார திட்டமான பழைய ஓய்வூதிய திட்டத்தை அம்பலப்படுத்துவேன் என தேர்தல் வாக்குறுதியில் (பக்கம்74-309ல்அறிவித்த) மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலத்தை விட எல்லாவற்றிலும் முதன்மை மாநிலமாக தமிழகம் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் உடனடி ஆணை பிறப்பிக்க வேண்டும்.
தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 2017 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஊதியம் வழங்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. பலர் நீதிமன்ற ஆணை பெற்றிருந்தாலும் அனைத்து வழக்குக்கும் அப்பீல் என்ற கல்விதுறையின் எஸ்.எல்.பி என்ற நடைமுறையால் உச்ச நீதிமன்றம் வரைச் சென்று ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி தமிழக முதல்வர் நேரடி கவனத்தில் கொண்டு ஆசிரியர் குடும்ப நலன் கருதி மாணவ-மாணவிகளின் கற்பித்தல் நலன்கருதி உடனடியாக ஊதியம் வழங்கிட ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் குடும்ப வாழ்வாதாரம் கருதி ஆணை வழங்கிட மாண்புமிகு தமிழக முதல்வரை வேண்டிக் கொள்வது
10) ஆறாவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியருக்கான ஊதிய முரண்பாடு பாதிப்பு தொடர்கதையாக செல்வதற்கு முற்றுப்புள்ளி வைத்து சமவேலைக்கு சம ஊதியம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியிலும் ஒன்றிய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போல் ஊதிய நிர்ணயம் செய்திட (தேர்தல்வாக்குறுதி பக்:74-311ன்படி) தமிழக அரசை வேண்டிக் கொள்வது
11) அரசு அலுவலர் ஆசிரியர்களின் மாதாந்திர ஊதியத்தில் ரூ.300 பிடித்தம் செய்யப்படும் NHIS-2021 திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட அறுவைசிகிச்சை மட்டுமின்றி அனைத்து வகையான மருத்துவச் செலவுகளையும் பணம் இல்லாமல் மருத்துவசிகிச்சை செய்திட உரிய மாற்றம் செய்து ஆணைபிறப்பித்திட தமிழக முதல்வரை வேண்டிக்கொள்வது..
12) 23.3.2022 அன்று சென்னையில் கூடிய தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோ ஜாக் 16 அம்ச தீர்மானத்தின்படி நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றி தரும் வகையில் மாண்புமிகு தமிழக முதல்வர் டிட்டோ ஜாக் மாநில நிர்வாகிகளை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என வேண்டிக் கொள்வது
13) ஆலங்குளத்தை மையமாகக்கொண்டு மாவட்ட கல்வி அலுவலகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற எம் இயக்கத்தின் நீண்டகால கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் தற்போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் தொடர் எதிர்பார்ப்பை நிறைவேற்றிடும் வகையில் எவ்வித நிதிச் செலவினமும் இன்றி புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் கடந்த காலங்களில் உருவாக்கப்பட்டு செயல்படுவது போல் ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்படும் வகையில் உரிய அறிப்பு வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆணை வெளியிட வேண்டும் என வேண்டிக் கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஸ்டீபன் சேவியர் ஞானம் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் வாசு மருதுபாண்டியன், டென்சிங், சேகர், ரவிபாண்டியன், ராஜகுரு, கடையநல்லூர் ரமேஷ், கதிரேசன், ஆறுமுகசாமி, மோதிலால், காதீர், புளியங்குடி தங்கமாரியப்பன், பாரதி, கோபிகண்ணன், தென்காசி திருமலை, சங்கை அசோக், ராஜேஸ், சகாயராஜ், கணேசன், குருவிகுளம் சமுத்திரராஜன் முத்துபாண்டி, சரவணன், மேலநீலிதநல்லூர் சதீஷ், மகேந்திரன், சேசுமைக்கேல் சாந்தகுமார்,மாணிக்கம், சாமியா கீழப்பாவூர் ஞானதுரை, நவமணி, கார்த்திக், கடையம் கோபிநாதன், பிரின்ஸ், ஆலங்குளம் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment