பாளை பல் சமய பணிக்குழு சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா!
50 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்!!
பாளையங்கோட்டை கத்தோலிக்க மறை மாவட்டம் பல் சமய பணிக்குழு சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா பாளை கிறிஸ்து ராஜா பள்ளி லாரன்ஸ் கலையரங்கத்தில் நடைபெற்றது.
பாளை கத்தோலிக்க திருச்சபை ஆயர் அந்தோணிசாமி, முஸ்லிம் அனாதைகள் இல்லம் தலைவர் எம்.கே.எம்.கபீர், நெல்லை சர்வ சமய கூட்டமைப்பு தலைவர் பி.டி.சிதம்பரம், பிரம்மா குமாரி புவனேஸ்வரி, ஆகியோர் தலைமை தாங்கினர்.
பல் சமய பணிக்குழு செயலாளர் பாதிரியார் மை.பா.ஜேசுராஜ் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 50 குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்கள் சுயமாக தொழில் செய்து வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு 14 குடும்பங்களுக்கு 2 ஆட்டு குட்டிகள் வீதம் 28 ஆடுகள், 28 குடும்பங்களுக்கு தலா 10 நாட்டுக் கோழிகள் வீதம் 280 நாட்டுக் கோழிகள், 2 குடும்பங்களுக்கு மாவு அரவை இயந்திரம், 2 குடும்பங்களுக்கு தையல் இயந்திரம், 3 குடும்பங்களுக்கு இஸ்திரி பெட்டி, ஒரு குடும்பத்திற்கு இட்லி வியாபாரம் செய்ய தள்ளுவண்டி வழங்கப்பட்டது.
விழாவில் ஆயர் அந்தோணிசாமி பேசியதாவது.
டிசம்பர் மாதம் முழுவதும் மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் கிறிஸ்து பிறப்பு விழா நடைபெற்று வருவது வழக்கம். நான் தினமும் 2 முதல் 3 கிறிஸ்து பிறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறேன்.
பல் சமய பணிக்குழு சார்பில் நடத்தப்படும் இந்த கிறிஸ்து பிறப்பு விழா வித்தியாசமான முறையில் ஏற்பாடு செய்து உள்ளது என்னை வியக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்து பிறப்பு குடில் வைக்கபடவில்லை. கிறிஸ்மஸ் தாத்தா வேடம் போட்டு யாரும் வரவில்லை, கிறிஸ்மஸ் பாடல்கள் பாடபடவில்லை . ஆனால் வழக்கம் போல் கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சியில் செய்யப்படும் எந்த ஒரு நிகழ்வும் இங்கு காணப்படவில்லை. கிறிஸ்து பிறக்கும் போதும் மேற்கண்ட நிகழ்வுகள் ஏதுவுமே செய்யப்படவில்லை. ஏனென்றால் கிறிஸ்து அனைவர்க்கும்மானவர் என்று விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது. அதே போல் கிறிஸ்து எதற்காக இந்த பூவுலகில் அவதரித்தாரோ அதை நிறைவேற்றும் பொருட்டு இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,
அனைத்து மதம், சமூகத்தை ஒருங்கிணைத்து சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள அனைத்து தரப்பு மக்களை உள்ளடக்கிய 50 குடும்பங்களை தேர்தெடுத்து அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு தேவைப்படும் ஆடு, நாட்டுக்கோழி, மாவு அரவை இயந்திரம், தையல் மிஷின், தள்ளுவண்டி, இஸ்திரி பெட்டி வழங்கி உள்ளது மிகவும் பாராட்டுக்குரியது,
கிறிஸ்து பிறப்பு விழாவில் இப்படி ஒரு சிறப்பான நலத்திட்டங்களை வழங்கிய பல் சமய பணிக்குழு நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதே போல் கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட நாம் அனைவரும் முயலுவோம் .
விழாவில் கலந்து கொண்ட அனைத்து சகோதர/சகோதிரிகளுக்கும் எனது அன்பான கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார்.
கூட்டத்தில் முஸ்லிம் அனாதைகள் இல்லம் தலைவர் எம்.கே.எம்.கபீர், சர்வ சமய கூட்டமைப்பு தலைவர் பி.டி.சிதம்பரம், இரட்சணிய சேனை கிறிஸ்டோபர், நெல்லை பெந்தேகோஸ்தே ஐக்கியம் பொறுப்பாளர் போதகர். ஜோயல், நெல்லை மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் ஜெரால்ட், இயேசு சபை கலைமனைகள் அதிபர் பாதிரியார் ஹென்றி ஜெரோம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில் பாதிரியார் போஸ்கோ குணசீலன், பாதிரியார் ஸ்டீபன் ஆரோக்கியசாமி, பிரிட்டோ, லில்லி , செல்வி, இருதய மேரி, கால்நடை மருத்துவர். பாரதி, 41வது வட்ட திமுக செயலாளர் கிங் பாலா உட்பட பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் 200க்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி, அப்துல் ரஹ்மான் மேல்நிலைப் பள்ளி, எஸ்.ஏ.வி.மகளிர் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியை முனைவர் ஜெயமேரி நெறியாளுகை செய்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை செ.சா. ஜெபசிங், நல்லாசிரியர் கணபதி சுப்பிரமணியன், வழக்கறிஞர் கந்தசாமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
முடிவில் முகம்மது ஜமால் ஈஸா நன்றி கூறினார்.

Comments
Post a Comment