நாட்டாமை வீட்டில் தகராறில் ஈடுபட்ட பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊர் பொதுமக்கள் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார்.
கொண்டமநாயக்கன்பட்டியில் நாட்டாமை வீட்டில் தகராறில் ஈடுபட்ட பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊர் பொதுமக்கள் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார்.
ஆண்டிபட்டி, மார்ச், 21:
ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் ஊழல் முறைகேடு செய்ததாக ஊர்தலைவர் பதவியில் இருந்து ஒருவரை அப்பகுதிமக்கள் நீக்கிவிட்டு புதிதாக ஒருவரை நியமித்த நிலையில் நீக்கப்பட்ட ஆத்திரத்தில் அந்த நபர் மற்றும் அவரது பெண்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் புதிய தலைவரை நியமித்த ஊர் நாட்டாமையை வீடு புகுந்த தாக்கி தகாத வார்த்தைகளால் பேசி கொலைமிரட்டல் விடுத்ததாகவும், அதற்கு நடவடிக்கை எடுக்ககோரியும் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு துணை காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியில் அனைத்து சமுதாயத்தையும் சேர்ந்த கிராமமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் பகவதி அம்மன் மற்றும் முத்தாலம்மன் கோவில் திருவிழாக்கள் பெரியதனம் மற்றும் நாட்டாண்மை தலைமையில் நடைபெறும். இந்நிலையில் கடந்த காலங்களில் நடைபெற்ற விழாக்களில் ஊர் தலைவராக இருக்கும் சக்திவேல் என்பவர் பந்தல் போடுவது, இன்னிசை கச்சேரி, நாடகம், ஆடல் பாடல் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களிலும், கொட்டு, மேளம் அன்னதானம், பூஜை பொருள்கள் வாங்குவது உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு லட்சக்கணக்கான ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் நடைபெற்ற ஊர் கூட்டத்தில் ஊர் தலைவராக இருக்கும் சக்திவேல் என்பவர் நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக அவரது உடன்பிறந்த சகோதரர் சுப்புராஜ் என்பவர் ஊர் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் ஊர் தலைவர் சக்திவேல் மற்றும் அவரது மகள்கள் பிரியா, வித்யா, சத்தியா, சுகன்யா ஆகிய நால்வரும் நேற்று நள்ளிரவில் புதிய ஊர் தலைவரை நியமித்த ஊர் நாட்டாமையாக இருக்கும் கண்ணபிரான் என்பவரது வீட்டிக்கு சென்று பூட்டியிருந்த வீட்டின் கதவைத் தட்டி, அவரை அநாகரிமாகவும் ஆபாசமாகவும் பேசி, தனது தந்தை ஊர் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கு நீ தான் காரணம் உன்னை கொல்லாமல் விடமாட்டோம் என்று கொலை மிரட்டல் விடுத்து அவரை தாக்க முற்பட்டுள்ளனர்.
இதையடுத்து கண்ணபிரான் தனது நண்பர்கள் மூலம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். காவல்துறை வருவதை அறிந்து அங்கிருந்து கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊர்தலைவரின் மகள்கள் சென்றுவிட்டனர். இத்தகவல் அறிந்த கொண்டமநாயக்கன்பட்டி பெண்கள், உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் அனைவரும் கோபமடைந்து, நேற்று ஆண்டிபட்டி காவல் துணை கண்காணிப்பளர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஊர் நாட்டாமை வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்து அவர் மீது தாக்குதல் நடத்த முயன்ற முன்னாள் ஊர்தலைவர் சக்திவேல் மற்றும் அவரது மகள்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். ஆண்டிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.
ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Comments
Post a Comment